குரூப் 4 தேர்வு முறைகேடு -நீதிமன்றத்தில் ஒருவர் சரண்

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் நீதிமன்றத்தில் அய்யப்பன் என்பவர் சரணடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,300 -காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த தேர்விற்கான தரவரிசை பட்டியலை கடந்த  நவம்பர் 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.  முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என தெரியவந்தது.

மற்ற தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்திய விசாரணையில் ,99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவர சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை விதித்துள்ளது.

இதைதொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் போரில் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுவரை தொடர்ச்சியாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் நீதிமன்றத்தில் அய்யப்பன் என்பவர் சரணடைந்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் வித்யாபதி  கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவர் குரூப் -4 தேர்வை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.