கொரோனா குறித்து பேரனிடம் கேட்ட பாட்டி.. அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட பாட்டி..!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகம் அடைந்தே வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்திலுள்ள சிரோலி பகுதியை சேர்ந்தவர் மாலுபாய் அக்ரம் அவாலி. 68 வயதாகும் இவருக்கு ஒரு மகனும் ஒரு பேரனும் உள்ளான். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவரின் மகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதுகுறித்து மாலு பாய் அவரின் பேரனிடம் கேட்டபொழுது, பேரன் கொரோனா வைரஸ் குறித்தும், உலக அளவில் அது ஏற்படுத்தியுள்ள  தாக்கம் குறித்தும் பாட்டியிடம் கூறினான். இதைக் கேட்ட மாலு பாய், கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.