7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார் -அமைச்சர் ஜெயக்குமார் 

7.5% உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது.  இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.இதனால் ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஆகவே 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருடன் 5 அமைச்சர்கள் சந்தித்தனர்.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரை நிர்பந்திக்க முடியாது.இதற்கு ஒப்புதல் தர ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு வழங்க ஆளுநர் வலியுறுத்தவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார்.7.5% உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.