விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா விவசாய கடன்!பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

இன்று  பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்தியா முழுவது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது .இந்நிலையில் முக்கிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவியுள்ளது.இரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்டது.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.ஆனால் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக மட்டும் இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருந்தது.இந்நிலையில் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடக்கும் நிலையில் இன்று (ஏப்ரல் 8-ஆம் தேதி )தேர்தல் அறிக்கையை  வெளியிட்டது பாஜக.

48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாஜக தேர்தல் அறிக்கை:

  • விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலான, 5 ஆண்டுகள் செலுத்தக் கூடிய வகையில் வட்டியில்லா விவசாய கடன் வழங்கப்படும்.
  • சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்.
  • நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசமைப்பு சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.
  • தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விரைவாக ராமர் கோயில் கட்ட முயற்சி செய்யப்படும்.
  • வாஜ்பாய் கனவை நனவாக்கும் வகையில் நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மாநில காவல் துறையை நவீன மயமாக்க நிதியுதவி வழங்கப்படும்.
  • 2 ஹெக்டேர் வைத்துள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • தேசிய தேன் மற்றும் தேனீக்கள் மையம் உருவாக்கப்படும், இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் .
  • அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஜிஎஸ்டி நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்படும்.
  • யோகாவை உலக அளவில் கொண்டுசெல்ல மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2022-க்குள் இரட்டிப்பாக்கப்படும்.
  • அதாவது அடுத்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
  • கட்டுமானத்துறையில் 2024-ம் ஆண்டிற்குள் முதலீட்டு மூலதனமாக ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2024-க்குள் நாட்டில் மேலும் 200 கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் உருவாக்கப்படும்.
  • ராஷ்ட்ரிய வியாபார ஆயோக்” என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும், இதன் மூலம் 60 வயதை கடந்த சிறு வியாபாரிகளுக்கு பென்ஷன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டில் செயல்பட்டு வரும் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் 
  • நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2024ம் ஆண்டிற்குள் அனைத்து  வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
  • கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும்.
  • முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.
  • நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
  • முத்ரா கடன் திட்டம் மூலம் 17 கோடி தொழில்முனைவோர் பலனடைந்துள்ளனர்; இந்த எண்ணிக்கை 30 கோடியாக உயர்த்தப்படும்.
  • பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Leave a Comment