குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரம் -தடையை நீக்கக்கோரி மனு

குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரம் -தடையை நீக்கக்கோரி மனு

பேரவைக்குள் குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில்  பேரவை செயலாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் , ” குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் “ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது நீதிமன்றம்.பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ,மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை குழுவின் 2-வது நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நோட்டீஸ்க்கு விதித்த இடைக்காலத் தடையை நீக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சட்டப்பேரவைச் செயலாளர், உரிமை மீறல் குழு தலைவர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்பொழுது இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் ,உரிமைக்குழு அனுப்பிய 2-வது நோட்டீஸூக்கு விதித்த தடையை நீக்கக்கோரி பேரவை செயலாளர் மனுத்தாக்கல்  செய்துள்ளார்,நோட்டீஸ் மீதான தடையை நீக்க கோரும் மனு  விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.

Join our channel google news Youtube