நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதத்திற்கு தான்! மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்! – ஐசிஎம்ஆர்

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்த வைரஸை தடுக்க, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸை தடுக்க அதிகார பூர்வ மருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஐசிஎம்ஆர் கொரோனா வைரஸில் இருந்து, குணமடைந்தவர்களின் நிலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில், நோய் எதிர்ப்பு சக்தி 3 முதல் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஒருவருக்கு ஒருமுறை கொரோனா வந்தால், மறுமுறை வராது என்பது, தவறான தகவல்.

இந்நிலையில், ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்க்கவா அளித்துள்ள பேட்டியில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், மீண்டும் வைரஸால் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதில் புள்ளிவிவரங்களையும் சேகரித்து வருகிறோம். மேலும், கொரோனவால் பாதிக்கப்பட்டு, மீண்டவர்களின் உடலில் நோய்  எதிர்ப்பு சக்தி குறைந்தபட்சம் 3 மாதம் வரையிலும், அதிகபட்சமாக 5 மாதம் வரையிலும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 90 நாட்களுக்கு பின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கினால், மீண்டும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, தொற்றில் இருந்து மீண்டவர்கள், அலட்சியமாக முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.