#விடியவிடிய போராட்டம்- விடியற்காலையில் தேநீருடன் துணைத்தலைவர்!!

#விடியவிடிய போராட்டம்- விடியற்காலையில் தேநீருடன் துணைத்தலைவர்!!

நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண்மை விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய இரு மசோதாக்களும் நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

Image

அப்போது திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் சபை விதிமுறை புத்தகங்களை கிழித்து எறிந்தார். துணைத் தலைவரின் மைக்கும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் 15 நிமிடம் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், தோலா சென் (இருவரும் திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), ராஜீவ் சாதவ், சையத் நசீர் உசேன், ரிபுன் போரன் (மூவரும் காங்கிரஸ்), கே.கே.ராகேஷ், எளமாரம் கரீம் (இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகிய 8 எம்.பி.க்களையும் இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்ய கோரி நாடாளுமன்ற விவகார ராஜாங்க மந்திரி வி.முரளதரன் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். மேலும் 8 பேரும் அவை விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதால் அவர்களை இடைநீக்கம் செய்யவேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இருந்த போதிலும் புத்தக்கத்தை கிழித்த மற்றும் அமளியில் ஈடுபட்ட  8 எம்.பி.க்களையும் இடைநீக்கம் செய்யும் தீர்மானம் உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதனால் அந்த 8 பேரும் இந்த கூட்டத்தொடரின் மீதம் உள்ள நாட்கள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்த வெங்கையா நாயுடு, அவர்களை அவையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால் அவர்கள், தங்களை இடைநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையை விட்டு வெளியேற மறுத்த நிலையில் சபை 20 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பிறகு சபை கூடிய போதும், 8 எம்.பி.க்களும் வெளியேற மறுத்து சபையிலேயே இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதனால் அடுத்தடுத்து 3 முறை சபையை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Image

இதன்பிறகு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடிய போது, சபையை நடத்திய புவனேஸ்வர் கலியா, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் அவர்கள் வெளியேற மறுத்தனர். 8 உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிய படி இருந்தனர். இதனால், புவனேஸ்வர் கலியா நாள் முழுவதும் சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

Image

இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் இனி இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாது.காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சிவசேனா, மதசார்பற்ற ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்கு வெளியே வந்து, இடைநீக்க நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.இத்தர்ணா போரட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் கைகளில் வைத்து உள்ளனர்.விடிய விடிய இப்போராட்டம் ஆனது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள 8 எம்.பி.க்களுக்காக மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டு வந்தார்.ஆனால்
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கொடுத்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் வாங்க மறுத்து விட்டனர்.

மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்களை இக்கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து வெங்கையா நாயுடு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து 2வது நாளாக விடிய விடிய நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
kavitha
Join our channel google news Youtube