தமிழக அரசிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு -இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து  திமுக தொடர்ந்த வழக்கு மீது இன்று தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் காரணமாக  மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும்  வீடுகளில் முடங்கி உள்ளனர்.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு அமைப்புகள் நேரடியாக பொதுமக்களுக்கு உதவிகளை மற்றும் நிவாரணங்கள் வழங்குவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த நேரத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கி நோய் தொற்றுக்கு வழி வகுப்பது தவிர்க்க வேண்டும்.
மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொருட்களை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் , மாநகராட்சியாக இருந்தால் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.எனவே பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் உதவ தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதன் பின் தன்னார்வலர்கள் உதவ தடை விதிக்கப்படவில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து உதவிகளை செய்யுங்கள் என்றே அறிவுறுத்தியுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில்  திமுக தொடர்ந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.