1000 ரூபாய் விநியோகம்! டோக்கன் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் – அமைச்சர் காமராஜ்

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நிவாரண தொகைக்கான டோக்கன் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு இடையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கடைகளில்  கொரோனா நிவாரண உதவித்தொகை ₹1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்பட வேண்டும்.எனவே அனைத்து நியாய விலை கடைகளுக்கான வாராந்திர விடுமுறை நாளான ஏப்ரல் 3-ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்  என்றும்  இதற்கான விடுமுறை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .

இந்நிலையில் இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில், முதலமைச்சர் அறிவித்த ரூ.1000 மற்றும் விலையில்லா ரேசன் பொருட்களுக்கான டோக்கன், ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வீட்டிற்க்கே வந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.