தேனி நிகழ்வின் போது ஸ்டாலின் அங்கு சென்றிருந்தாரா? முதலமைச்சர் பழனிசாமி கேள்வி

அரசை குறை கூறுவதையை ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சுஜித்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இரவு, பகல் பாராமல் சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறுவனை உயிரோடு மீட்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதுபோன்ற தொழில்நுட்பத்துடன் இதற்கு முன்பு மீட்பு பணிகள் நடந்ததில்லை.மீட்பு பணிகள் குறித்த ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் தவறானது.அரசை குறை கூறுவதையை ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் தேனியில் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றது, அப்போது இந்த அளவிற்கு மீட்பு பணிகள் நடைபெறவில்லை. தேனி நிகழ்வின் போது ஸ்டாலின் அங்கு சென்றிருந்தாரா? அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டிருந்தார்களா? என்று கேள்வி எழுப்பினார்.