இன்று(05.02.2020) தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு… காலை பத்து மணிக்கு புனித நீர் தெளிக்கப்படுகிறது…

  • உலகப்புகழ் பெற்ற தென் மேரு என அழைக்கப்படும்  தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு  விழா 23 ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கிறது.
  • அனைத்து தமிழ் சொந்தங்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிகழ்வு இன்று அரங்கேற்றம்.

இதற்காக ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறையும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் என பல்வேறு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதன் விளைவாக  கடந்த மாதம் 27ம் தேதி பூர்வாங்க பூஜையும், அடுத்து  31ம் தேதி வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும் சிறப்பாக  நடந்தது. இதை தொடர்ந்து பிப்ரவரி 1ல் புனித நீர் அடங்கிய கலசங்கள்  யாகசாலை மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து நேற்று காலை ஆறாவது கால யாகசாலை பூஜையும் மாலை ஏழாவது கால யாகசாலை பூஜையும் சிறப்பாக நடந்தன. இந்த யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாள், 41 உற்ஸவ மூர்த்திகள், எட்டு பலி பீடங்கள், 10 நந்தி, 22 கோவில் கலசங்கள்  என 405 சுவாமிகளுக்கும் 705 குடங்களை இந்த  வேதிகையில் வைத்து  பூஜை செய்தனர். இன்று அதிகாலை 4:30 மணிக்கு எட்டாவது கால யாகசாலை பூஜையும், நாடி சந்தனமும், மகா பூர்ணாஹுதி தீபாராதனை, யாத்ரா தானமும் நடக்கிறது. சரியாக காலை, 7:25 மணிக்கு, யாகசாலை மண்டபத்தில் இருந்து, புனித நீர் குடங்கள் புறப்படும். காலை, 9:30 மணிக்கு, பெரிய கோவில் விமான மற்றும் கோபுரங்களில், புனித நீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா நடக்கிறது. சரியாக காலை 10:00 மணிக்கு, மூலவர் பெருவுடையாருக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.பின்  மாலை, 6:00 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும்; இரவு, பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலாவும் நடக்கின்றன. பல ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த குடமுழுக்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது

author avatar
kavitha