குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – பேருந்துகளுக்கு தீ வைப்பு

  • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவின் வட மாநிலங்கள் பதற்றமான நிலையில் இருந்து வருகிறது.இதற்கு காரணம் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகும்.இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.கடுமையான விவாதங்களும் நடைபெற்றது.இறுதியாக மசோதா நிறைவேறியது.பின்பு குடியரசு தலைவரும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டார்.

ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் உள்ள மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது.குறிப்பாக அசாம்,திரிபுரா,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது.இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக   டெல்லியில் உள்ள நியூ ப்ரண்ட்ஸ் காலனியில் நடைபெற்ற போராட்டத்தில் 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த போராட்டத்தில் பாஜக  போலீசாரே பேருந்துகளுக்கு தீ வைத்தனர் என்று டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிஷோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் இது பாஜகவின் மோசமான அரசியலுக்கு மிகப்பெரிய சான்று என்றும் தெரிவித்துள்ளார்.