இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை ! முதலில் எந்த வாக்குகள் எண்ணப்படும்?

இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,  தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர்.

VOTER HELPLINE மொபைல் ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் 88 பேர் தமிழகம் வந்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். 36 ஆயிரம் காவலர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு வழங்குவர். 19 கம்பெனி துணை ராணுவப்படையின்  1,520 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

8 மணிக்கே தபால் வாக்குகளுடன் மின்னணு இயந்திர வாக்குகளையும் எண்ணும்பணி தொடங்கும்.ஒவ்வொரு சுற்றுகளின் முடிவும் வர 30 நிமிடங்கள் ஆகும். மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும்.

மின்னணு இயந்திரங்களில் எண்ணப்பட்டபின்னரே ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும்.அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளும், குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படும்.17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment