பெரியார் குறித்து சர்ச்சை கருத்து ..! இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை

  • பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
  • வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகிவிடாதீர்கள் என்று ரஜினிக்கு அழகிரி அறிவுரை கூறியுள்ளார். 

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்தும் பேசும்பொருளாக மாறியுள்ளது.இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், 1971-ஆம் ஆண்டு பெரியார் நடத்திய  ஊரணியில் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்.ராமர் சிலைக்கு செருப்புக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த செய்தியை துக்ளக் நாளிதழ் மட்டுமே வெளியிட்டது என்று ரஜினி பேசினார்.ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது முதல் அவருக்கு தமிழகத்தில் உள்ள அதிமுக,திமுக ,திராவிடர் கழகம் ,விசிக ,மதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.ஆனால் பாஜக-வினர் மட்டும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கருத்துக்களாக மட்டும் அல்லாமல் ரஜினிக்கு எதிராக ஒரு சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு ரஜினி கூறுகையில்,கூறிய கருத்துக்கள் அனைத்தும் கற்பனையானவை அல்ல.நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

 

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ் சமுதாயத்திற்கு விடியலைப் பெற்று தந்து, சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த தந்தை பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் ரஜினிகாந்த் கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.ரஜினிகாந்த் இத்தகைய அரசியல் சார்பான கருத்துக்களை தவிர்த்திருக்க வேண்டும்.நடிகர் ரஜினிகாந்த் அவர்களே, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகிவிடாதீர்கள்” என்று அன்போடு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.