பட்டாக்கத்தியால் கைவிரல்களை வெட்டிய கல்லூரி மாணவர்..!

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருபவர் கார்த்திக். இவர் தன்னை செல்வாக்கு மிகுந்தவர் போன்று காட்டிக் கொண்டு வலம் வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மற்ற மாணவர்கள் கார்த்திக்கிற்கு அதிக அளவில் மரியாதை கொடுத்து வந்தனர்.
அதே கல்லூரியில், அவருடன் பயின்று வரும் மாணவர், அஸ்வின். இவர் கார்த்திக்கை உதாசீனப்படுத்திய தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த வாய்த்தகராறு பெரியதாகி, கல்லூரி முடிந்ததும் கல்லூரி வளாகத்தில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்த கார்த்திக், அஸ்வினை சரமாரியாக வெட்டினார்.
இதில் அஸ்வினின் இரண்டு கை விரல்களை கார்த்திக் வெட்டினார். தற்பொழுது அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து பல்லாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.