சென்னை, பல்லாவரம் தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் இமானுவேல் ஜெயசீலன். இவர் தமிழக வணிகர் சங்க பேரவை மாநில துணைத் தலைவராக உள்ளார். இவர் நேற்று காலை அருகிலுள்ள தேவாலயத்திற்கு தனது குடும்பத்துடன் வழிபட சென்றுள்ளார்.
அப்போது வழிபாடு முடிந்து இமானுவேல் ஜெயசீலன் அவர்களின் தயார் மட்டும் வீடு திரும்பியுள்ளார். அவர் வந்து பார்க்கும் போது, பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 சவரன் நகை, 30 லட்ச ரூபாய் ரொக்கமும் திருடு போனது தெரியவந்துள்ளது. பின்னர், அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் விசாரணையை துவங்கிய போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் சந்தேகப்படும்படியாக ஏதும் தென்படுகிறதா என ஆராய்ந்தனர். பின்னர் அவர்கள் தீவிர விசாரணையை அடுத்து, கொள்ளையர்கள் வெகு நாட்கள் இந்த வீட்டை நோட்டமிட்டு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திவிட்டுதான் கொள்ளையடிக்க வந்ததையும் தெரிவித்தனர்.
வீட்டில் அனைவரும் எப்போது எங்கு செல்வார்கள் என நோட்டம் விட்டுதான் பட்டப்பகலில் இப்படி துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. கொள்ளையர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.