40க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த பலே கில்லாடி! பெண் போலீசையும் விட்டுவைக்காத ஆசாமி …..

40க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த பலே கில்லாடி! பெண் போலீசையும் விட்டுவைக்காத ஆசாமி …..

 

தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் காவல்துறை பெண் அதிகாரி உள்பட 40-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து, புருஷோத்தமன் என்பவர்  மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை வெள்ளலூர் கனகலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். 57 வயதான இவர் தனது மகள் கீதாஞ்சலியுடன் வசித்து வருகிறார். கோவை காந்திபுரத்தில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றை புருஷோத்தமன் நடத்தி வந்துள்ளார். காந்திபுரம் பகுதியில் உள்ள மெட்டி ஒலி திருமண தகவல் மையம் மூலம், அவர் இரண்டாவது திருமணத்துக்காக பதிவு செய்திருந்த நிலையில், பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணும் அதே தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். திருமண தகவல் மையத்தை நடத்தி வந்த மோகன், வனஜா ஆகியோரது ஏற்பாட்டின்பேரில் புருஷோத்தமனுக்கும், அப்பெண்ணிற்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. புருசோத்தமன் தொழிலை விரிவுபடுத்துவதாக கூறி அப்பெண்ணின் வீட்டிலிருந்து 3 கோடி ரூபாய் வரை பணம் பெற்றதாகவும், அனைத்து சொத்துகளையும் விற்று பணம் தருமாறு அப்பெண்ணை வற்புறுத்தியதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து சந்தேகமடைந்த அந்த பெண்ணின் வீட்டார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மேலும் 7 பெண்களை திருமணம் செய்து கொண்டு புருசோத்தமன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. திருமணத் தகவல் மையம் மூலம், பணக்கார பெண்களை அவர் திருமணம் செய்ததாகவும், அதன்பின்னர் தொழில் நஷ்டம் உள்ளிட்ட காரணங்களை சொல்லி கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், திருச்சியில் தலைமறைவாக இருந்த புருஷோத்தமன், அவரின் மகள் கீதாஞ்சலி ஆகியோரைப் பிடித்த போலீசார், கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணக்கார பெண்கள், விதவைகள் மற்றும் கணவனை பிரிந்து தனித்து வாழும் பெண்கள் ஆகியோரைக் குறிவைத்து திருமண ஆசை காட்டி, புருஷோத்தமன் பலகோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, தந்தை-மகளைக் கைது செய்த போலீசார், மகிளா நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Image result for purusothaman 40 girl marriage cheating

தமிழகத்தில் மட்டுமின்றி, பஞ்சாப், மும்பை, கொல்கத்தா, குண்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான பெண்களை புருசோத்தமன் திருமணம் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இடத்திற்கு தகுந்தபடி தனது பெயரை தினேஷ்குமார், ஆனந்த் புருஷோத்தமன், மிஸ்டர் நாயுடு, ரமேஷ், கிருஷ்ணா,அனந்த ராமகிருஷ்ணன், குமார், மோகன்ராஜ்,கோபாலகிருஷ்ணராஜா, சுரேஷ்ராஜா, வெங்கிடுபதி என 12 பெயர்களை வைத்தும் ஏமாற்றி வந்துள்ளார்.

நாடு முழுவதும் காவல்துறை பெண் அதிகாரி உள்பட 40 க்கும் மேற்பட்ட பெண்களிடம் தனது லீலைகளைக் காண்பித்துள்ள புருஷோத்தமன் “நான் அவனில்லை” பட பாணியில் அடுத்தடுத்த இடங்களுக்கு இடம் பெயர்வதை வழக்கமாகவே கொண்டிருந்துள்ளார். புருசோத்தமன் மீது புகார் கொடுக்க 14 பெண்கள் மட்டுமே தயாராக உள்ள நிலையில், குடும்ப கவுரவம் காரணமாக மற்றவர்கள் புகார் அளிக்கத் தயங்குவதாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *