நிலவில் சரித்திரம் படைக்க காத்திருக்கும் சந்திரயான்-2!இதுவரை கடந்த வந்த பாதை

நிலவில் சாதனை படைக்க காத்திருக்கும் சந்திராயன் -2 இதுவரை கடந்த வந்த பாதையை பார்ப்போம்…

ஜூலை 22 ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதன்பின் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சந்திராயன் 2  விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

கடந்த  ஆகஸ்டு 14-ஆம்  தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. 

சந்திராயன் 2 விண்கலம் ஆகஸ்ட்  20-ஆம் தேதி  நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 22ம் தேதி நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியது.செப்டம்பர்  2-ஆம்  தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.

செப்டம்பர் 3-ஆம் தேதி 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கி வருகிறது. 

இதனால் நாளை அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள்  விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில்  தரையில் இறக்க இஸ்ரோ முடிவு செய்து உள்ளது.இதனை இந்தியா மட்டும் அல்லாது உலக நாடுகளும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது.