மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் – தமிழகம் இரண்டாம் இடம்!

மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டமான “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தின் அதிகமாக நிதி உதவி பெறும் மாநிலங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

ஏழை மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டமான “ஆயுஷ்மான் திட்டம்” கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தின் கீழ் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் “ஆயுஷ்மான் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், இதுவரை இந்த திட்டத்திற்கு 3 ஆயிரத்து 71 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் 641 கோடி ரூபாய் நிதி பெற்று குஜராத் முதலிடம் பெற்றுள்ளது. 344 கோடி ரூபாய் நிதி பெற்று தமிழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் இந்த காப்பீடு திட்டத்தில் கீழ் 11 ஆயிரத்து 75 பேர் பயன் பெற்றுள்ளனர். பயன் பெற்றோர் எண்ணிக்கையில் தமிழகம் 4ம் இடத்தைப் பெற்றுள்ளது.