குளத்தில் நச்சு… 300க்கும் மேற்பட்ட யானைகள் பலி…

தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் உள்ள  ஒகவாங்கோ டெல்டா பகுதி தேசிய பூங்காவில் கடந்த மே மாதம் தொடங்கி ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஒன்றன்பின் ஒன்றாக 300-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் இறந்துபோயின.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து யானைகளின் இறப்புக்கான காரணம் குறித்து அறிய விசாரணை முடுக்கி விடப்பட்டது.இந்த நிலையில் நச்சுத்தன்மை கலந்த நீரை அருந்தியதே யானைகள் இறப்புக்கு காரணம் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி போட்ஸ்வானா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துணை இயக்குநர் சிரில் தாவோலோ கூறுகையில், “சயனோபாக்டீரியா என்னும் நச்சுப்பொருள் நீரில் உற்பத்தியானதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த நச்சுத்தன்மை கலந்த நீரை யானைகள் அருந்தியதாலேயே 330 யானைகள் பலியாகின. எனினும் போட்ஸ்வானாவின் வனவிலங்குகள் இன்னும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேசமயம் யானைகள் மட்டும் ஏன் பாதிக்கப்பட்டன என்பது குறித்தும் பிற விலங்குகள் எவ்வாறு தப்பிப் பிழைத்தன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறினார்.

author avatar
Kaliraj