கறிக்குழம்பும், கறிச்சோறும் நமக்குப் புதிது அல்ல. காலங்காலமாக அசைவம் சாப்பிடும் பழக்கம், பெரும்பான்மையான மக்களிடம் இருக்கிறது. அன்று, கடா வெட்டும் கோழிக் குழம்பும் எப்போதாவதுதான் கிடைக்கும். ஆனால், இன்று அப்படி இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் ஓட்டல், ரெஸ்டாரன்ட். ஒரு போன் செய்தால் போதும், கிரில்டு சிக்கனும், மட்டன் கோலாவும், பிங்கர் ஃபிஷ்ஷும் வீடு தேடி வந்துவிடுகிறது. பணமிருந்தால் தினமும் விருந்துதான் என்ற நிலை உள்ளது.
நாம் உண்ணும் உணவை நம் உடல் கொழுப்பாக மாற்றி வைத்துக்கொள்ளும். உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது கொழுப்பை உடைத்து, தனக்கு தேவையான ஆற்றலை உடல் தயாரித்துக்கொள்கிறது. தினசரி அசைவம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு கொழுப்புச்சத்து அளவுக்கு அதிகமாக கிடைக்கிறது. இந்த கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்கும்போது உடல்பருமன் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய் போன்றவற்றுக்கு உடல்பருமன்தான் தலைவாசல்.
அசைவத்தில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. இது, இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பை கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்போது, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு, திடீர் இதய துடிப்பு முடக்கம், பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்பு ஏற்படுகிறது.
உடலில் அளவுக்கு அதிகமாக தங்கும் கொழுப்பை கல்லீரல்தான் சேமித்து, தேவைப்படும்போது ஆற்றலாக மாற்றுகிறது. இப்படி கொழுப்பு அளவுக்கு அதிகமாக சேர்ந்துகொண்டே போகும்போது கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இதனால், கல்லீரல் சுருக்கம் ஏற்படுகிறது.
அசைவம் சாப்பிடும்போது உடலில் அளவுக்கு அதிகமாக புரதம் சேர்கிறது. இப்புரதத்தை நீக்கவேண்டிய பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. தொடர்ந்து அளவுக்கு அதிகமாக வேலைசெய்ய நேர்கிறபோது, ஒருகட்டத்தில் சிறுநீரகங்கள் பழுதாகி, முழுமையாக செயல்படாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. அளவுக்கு அதிமான கொழுப்பு உடலுக்கு ஆபத்து.