பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சங்கீத் சோம், தாஜ்மஹால் குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 16, 2017, 12:56 PM
உலகின் ஏழு அதிசயங்களில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்து உள்ள தாஜ்மகாலும் ஒன்றாகும். ஆனால் அந்த மாநிலத்தின் சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் பெயர் இடம் பெற வில்லை. உத்திரப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக அச்சிடப்பட்டுள்ள இந்த சுற்றுலா கையேட்டில் புகழ் பெற்ற கங்கா ஆர்த்தியை அட்டைபடமாக கொண்டு உள்ளது. ஆனால் மாநிலத்தின் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் தாஜ்மகாலின் பெயர் காணப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலை காண 60 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகின்றனர். இந்த மாநிலத்திற்கு இதன் மூலமே அதிகபடியான வருவாய் வருகிறது.
கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதியானந்த் கூறும் போது நமது இந்தியா கலாச்சாரத்திற்குட்பட்டது ராயாமணமும் கீதையும் தான் தாஜ்மஹால் அல்ல என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தாஜ்மஹாலை குறித்து பா.ஜ.க எம்.ஏல்.ஏ. சங்கீத் சோம், தற்போது சர்ச்சையான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது என்றும், இந்திய கலாச்சாரத்திற்கு களங்கம் விளைவிப்பது என்றும் கூறியுள்ளார். மேலும், . தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகான் தனது தந்தையையே சிறையில் அடைந்தவர் என்றும் அவர் இந்துக்களை முற்றிலுமாக அழிக்க நினைத்தார் என்று கூறியுள்ளார். இத்தகையவர்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கமாக இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது எனவே நமது வரலாற்றை மாற்ற வேண்டும் எனவும் பா.ஜ.க எம்.ஏல்.ஏ. சங்கீத் சோம் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.