பெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்..!

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். இச்சம்பவதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர்எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் ஈவெ.ரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல்துறையினர் விரைவில் கைது செய்து  சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

காவி புனிதமானது. அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பண்பின் குணமே காவி. அதை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல. ஆனால் அதே நேரத்தில் தி.மு.க வின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், ஈவெராவின் பிறந்த நாளன்று நான் கூறியதை மேற்கோள் காட்டி, இது தான் அவருக்கு நீங்கள் காட்டும் மரியாதையா என்று கேட்டிருப்பது அரசியல் உள்நோக்கதோடு வீசியிருக்கிற கேள்வி.

காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே , இதற்கு உள்நோக்கம் கற்பித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுகவின் வன்மமான அரசியல் உள்நோக்கம் கண்டிக்கத்தக்கது. மேலும் விசாரணை நிலுவையில் இருக்கும் போதே, இப்படி பேசியிருப்பது, இந்த செயல் திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

ஆகையால், காவல்துறையினர் திருமதி. கனிமொழி அவர்களை இது குறித்து விசாரித்து உண்மையை அறிய வேண்டும். இந்த அநாகரீக செயலின் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan