21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் – ராம்நாத் கோவிந்த்

21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி அமல்படுத்தல் குறித்த பார்வையாளர் மாநாட்டில் உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசிய கல்வி கொள்கை 2020 அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் ஒரு சமமான மற்றும் துடிப்பான அறிவு சமுதாயத்தை வளர்ப்பதற்கான பார்வையை அமைக்கிறது. 21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். புதிய கல்வி கொள்கை இந்தியாவின் பெருமையை மீட்டெடுக்கும்.

கல்விக் கொள்கையை உருவாக்கிய கஸ்தூரி ரங்கன் குழுவினருக்கு குடியரசு தலைவர் பாராட்டுகளை தெரிவித்து, 2035 ஆம் ஆண்டில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை (ஜி.இ.ஆர்) 50 சதவீதமாக உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கை 2020 இன் முக்கிய குறிக்கோள் என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இந்த இலக்கை அடைய தொழில்நுட்பம் நாட்டிற்கு உதவ முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய காலங்களில் இந்தியா உலகளவில் மதிக்கப்படும் கல்வி மையமாக இருந்தது. தக்ஷஷிலா மற்றும் நாலந்தாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒரு முக்கிய வாய்ந்தவையாக இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் உலக தரவரிசையில் இடம்பெறவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை அதிகப்படியான விமர்சன சிந்தனையையும் விசாரணை மனப்பான்மையையும் ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்