பெண்களுக்கு அழகே கூந்தல் தான்! அதை பராமரிப்பது எப்படி?

பெண்கள் கூந்தல் அழகை பராமரிக்கும் முறை. 

பெண்கள் என்றாலே அழகு தான், அது நீளமான கூந்தல் என்றால் சொல்லவே வேண்டாம். சிலர் முடியை சீராக பராமரிக்காமல் முடி உதிர்ந்து விடுகிறது. ஒரு சிலரோ முடியை வளர்க்க காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தி முடியை வளர விடாமல் செய்கிறார்கள்.

நமது முந்தைய காலகட்டத்தில் இயற்கையான காற்றும், சத்தான உணவு வகைகளும் இருப்பதால் சருமமும், கூந்தலும் அவர்களுக்கு இயற்கையாகவே ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இப்போது நாம் வெளியே சென்றாலே தூசிகளுடன் தான் வீட்டுக்குள் நுழைகிறோம், அது நமது சருமத்தையும், கூந்தலையும் வலுவிழக்கச் செய்கிறது. தினமும் கூந்தலின் வளர்ச்சிக்காக 10 நிமிடங்கள் ஒதுக்கி கீழ்க்கண்ட விஷயங்களை செய்து பராமரித்தாலே போதுமானது.

தலைக்கு எண்ணெய் வைக்கும் போது செய்ய வேண்டியவை :

குளிப்பதற்கு முன் தலையில் எண்ணெய் தேய்ப்பது கூந்தலின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. அதற்காக ஐந்து நிமிடங்கள் மட்டுமே நீங்கள் ஒதுக்க வேண்டும். அதாவது தினமும் காலை அல்லது இரவு நேரத்தில் எண்ணெய் தேய்க்கும் போது மேலாக தேய்க்காமல் எண்ணெயை விரல்களால் தொட்டு ஸ்கால்ப் பகுதி வரை கூந்தலை அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும் . இதற்காக கடைகளில் இருந்து உயர்ந்த விலையுடைய எண்ணெயை வாங்க வேண்டும் என்று இல்லை, வீட்டில் உள்ள தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போதுமானது.

மேலும் எண்ணெயை சூடு செய்து உச்சந்தலை முதல் ஸ்கால்ப் நுனி வரை தடவி மாதம் ஒருமுறை மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்வதால் கூந்தல் வளருவது மட்டுமில்லாமல், மன அழுத்தத்தை குறைத்து நம்மை ரீலாக்ஸாக வைக்கும். மேலும் கூந்தலை வலுவிழக்காமலும், பிளவு, வெடிப்பு உண்டாகமலும் தடுக்கும், கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து முடி உதிர்வை தடுக்கும்.

குளிக்கும் போது செய்ய வேண்டியவை:

குளிக்கும் போது தலையில் தூசி எதுவும் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு தூசிகள் நமது முடியை பற்றி கொள்ளும் போது பொடுகு, பேன், முடி உதிர்வு போன்றவை உண்டாகும். எனவே தலைக்கு குளித்து முடித்த பிறகு அரிசியை கழுவிய தண்ணீரை கொண்டோ, உருளைக்கிழங்கை நறுக்கிய தண்ணீரிலோ தலையை அலச வேண்டும். இவ்வாறு அலசுவதன் மூலம் கூந்தலுக்கு ஆரோக்கியமும், வலுவும் கிடைக்கும்.

மேலும் முடியில் உள்ள அழுக்குகளை போக்குவதற்கு பல விதமான ஷாம்புகளை பயன்படுத்துகிறோம். இப்போது எல்லாம் நறுமணத்தை பார்த்து கொண்டு ஒவ்வோரு பிரச்சினைக்கும் ஒவ்வோரு கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நமது கூந்தல் பாதிக்கப்படுகிறது. எனவே முடி வளர்ச்சிக்கு வித விதமான பொருட்களை பயன்படுத்தாமல், ஒன்றை மட்டும் தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது, முடிந்த வரை கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது நல்லது.