இன்று வெளியான அயோத்தி தீர்ப்பு !வழக்கு கடந்த வந்த பாதை…

நிலம் கொண்டாடுவதில் பிரச்சினை :
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய  2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு :
நில பிரச்சினை காரணமாக ,2010-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு :
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மேல்முறையீட்டு வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு,அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணையில் சமரசமான தீர்வு காணவேண்டும் என்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட சமரசக்குழுவை  அமைத்து உத்தரவு பிறப்பித்தது.
சமரச குழுவால் தீர்வு காண முடியவில்லை :
ஆனால் அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண இயலவில்லை அயோத்தி விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் தொடர் விசாரணை : 
இதன் பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ,நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும்  அறிவித்தார். இதனால் நாள்தோறும் விசாரணை நடைபெற்று வந்தது.40 நாள் தொடர் விசாரணை முடிந்த பின்பு  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
விரைவாக விசாரிக்க வாய்ப்பு :
ஆனால் இதற்கு இடையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவி காலம்  வருகின்ற 17-ஆம் தேதியுடன் முடிகிறது.அதற்கு முன்னதாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
இதனால் கடந்த சில நாட்களாகவே உத்திரபிரதேசம்,டெல்லி,தமிழகம் உள்ளிட்ட அனைத்து  மாநிலங்களில் உஷார்படுத்தப்பட்டது.மேலும் மத்திய அரசு எந்த நேரத்திலும் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்தது.பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முடிக்கிவிடப்பட்டது.குறிப்பாக அயோத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆலோசனை :
அயோத்தி விவாகரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உத்தரப் பிரதேச மாநில தலைமை செயலாளர் மற்றும் அம்மாநில போலீஸ் டிஜிபி ஆகியோருடன் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு :
இதனிடையே நேற்று இரவு திடீரென அயோத்தி வழக்கில் இன்று  தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று  காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டது.தலைமை நீதிபதி அமர்வில் ,நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் இடம்பெற்றனர்.இந்த அமர்வுதான் இன்று தீர்ப்பு வழங்கியது.இறுதியாக  அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு.