காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து கிடைக்கும்-மக்களவையில் அமித் ஷா பேச்சு

காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதாவை  இன்று மக்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை  அமைச்சர் அமித் ஷா.தாக்கல் செய்த பின்னர் மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின்போது  அமித் ஷா பேசினார்.அவர் பேசுகையில், தமிழகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் 370-வது சட்டப்பிரிவு கிடையாது.சிறப்பு பிரிவு காரணமாக காஷ்மீரை இந்தியாவின் ஒரு மாநிலமாக பார்க்க முடியவில்லை .காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயன்றபோதே பிரிவு 370 காலாவதியாகிவிட்டது.

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பின்னர், உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து கிடைக்க வழிவகை செய்யப்படும்.இது சரியான முடிவா இல்லையா என்பதை வரலாறு முடிவு செய்யட்டும்.

காஷ்மீர் பற்றி பேசும்போது எல்லாம் பிரதமர் மோடி நினைவுக்கு வருவார்.பாகிஸ்தான் குரலில் பேசும் குழுக்களுடன் பேச்சுவார்த்தை இல்லை.அவசரநிலையை அமல்படுத்தியதன் மூலம் காங்கிரஸ் ஒட்டுமொத்த இந்தியாவையும் யூனியன் பிரதேசமாக மாற்றியது.

ஊழல் விவகாரங்களை மத்திய அரசு கையில் எடுத்ததுதான் காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கு கவலை, சட்டப்பிரிவு 370 ரத்து குறித்து அல்ல. நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் போது, ஏன் காஷ்மீரில் உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

பிரிவு 370 காரணமாக காஷ்மீரில் சிறுபான்மையினர் நல ஆணையம் உருவாக்கப்படவில்லை. கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்று பேசினார்.