நாங்க ரெடி, நீங்க ரெடியா-ராகுலுக்கு அமித் ஷா சவால்

  • குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மாநாடு நடைபெற்றது.
  • ராகுலுடன் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விவாதம் நடத்த தயாராக உள்ளார் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 1955-ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து,பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.சட்டமும் அமலுக்கு வந்துவிட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த சட்டத்திற்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக  கர்நாடகாவின் ஹூப்ளி நகரில்  குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம்  நாடுகளிலிருந்து வரும் தலித்துகளுக்கு எதிராக இருப்பதால் உங்களுக்கு என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார். ராகுல் காந்திக்கு நேரடியாக சவால் விடுக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக படித்து , முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க மாட்டோம் என்று இருந்தால் ராகுலுடன் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விவாதம் நடத்த தயாராக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.