6 மாவட்டங்கள்,4 மணி நேரத்தில் 366 கிலோமீட்டரை கடந்த ஆம்புலன்ஸ்!சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்

இராமநாதபுரம் மாவட்டம் அழகர்குளம் கிராமத்தை சேர்ந்த நயினார் முகமது  என்பவரின், மகன் முகமது அமீர் (13). இவருக்கு முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்த நிலையில், திடீரென இடதுகால் செயலிழந்ததோடு, தண்டுவடத்தில் வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அவரை மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மதுரை மருத்துவமனை சிகிச்சை அளிக்க முடியாது என கைவிரித்த நிலையில், அந்த சிறுவனை ராமநாதபுரம் மருத்துவமனையில், அனுமதித்தனர். அங்குள்ள மருத்துவர்கள் அவரை உடனடியாக, மேல் சிகிச்சைக்காக  அடுத்த 6 மணிநேரத்திற்குள் புதுசேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து, இராமநாதபுரம் மற்றும் புதுச்சேரிக்கு  இடையிலான 366km தூரத்தை 6 மணி நேரத்தில் எப்படி கடக்க முடியும் என அமீரின் பெற்றோர் தவித்த நேரத்தில், அவர்களுக்கும் உதவும் வகையில்,  அவர்களுக்காக தமுமுக ஆம்புலன்ஸ் களமிறங்கியது.

இதனையடுத்து, ராமநாதபுரம் – புதுசேரி வரை உள்ள தமுமுக அம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் செய்தி தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரும், சமூக அமைப்பினர் மற்றும் இளைஞர்களும் களத்தில் இறங்கி, போக்குவரத்து நெரிசல்களை சீர் செய்து, 8 மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை வெறும் நான்கே மணிநேரத்தில் கடந்து சென்று மருத்துவமனையை அடைந்தனர்.அதுவும்  இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களை கடந்து சென்றுள்ளது ஆம்புலன்ஸ்.

இதுகுறித்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்கள் கூறுகையில், அந்தந்த  மாவட்டங்களில் இருந்த தமுமுக அம்புலன்ஸ் ஓட்டுனர்கள், காவல்துறையினர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களினுதவியால் தான் இவ்வாறு மிக குறைந்த நேரத்தில் என்னால் மருத்துவமனையை வந்தடைய முடிந்தது. மேலும், சிறுவன் அமீர் நன்கு குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.