23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மாநிலங்களவையில் ஒலிக்கிறது பார்லிமென்ட் டைகரின் குரல்

23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகி உள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது.மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.ஆனால் மாநிலங்களவைக்கான தேர்தல்  ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்காக திமுக கூட்டணியில் உள்ள மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி அவர் வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.

ஆனால்  தேசத்துரோக வழக்கின்  தண்டனை காரணமாக  மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா?என்ற சந்தேகம் அதிகம் இருந்து வந்தது .இதனால் திமுக சார்பில் 3-வது வேட்பாளராக என் .ஆர். இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார்.பின்  வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது.இதில் வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் திமுகவின் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட  6 பெரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இதனால் 6 பேருக்கும் மாநிலங்களவை எம்.பி.க்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.  வைகோவும் தனது மாநிலங்களவை எம்.பி.க்கான சான்றிதழை பெற்றுவிட்டார்.ஏற்கனவே  மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் , இருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வைகோ.23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் மாநிலங்களவைக்கு  தேர்வாகி உள்ள நிலையில் அங்கு தனது சூறாவளி பேச்சை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. வைகோவின் அனல் பறக்கும் பேச்சு காரணமாக  பார்லிமென்ட் டைகர் என்றும் அவரை புகழ்வார்கள்.