அதிமுக ஒரு ஆலமரம்… அது அனைவருக்கும் நிழல் தரும்…ஜெயக்குமார்..!

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அதிமுக அறிவித்தது.

இதற்கு முன்பாகவே திமுக தங்களது வேட்பாளர்களை அறிவித்திருந்தது. திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு சீட் கொடுக்காமல் மூன்று திமுக உறுப்பினர்களுக்கே சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக இரு அதிமுக உறுப்பினர்களுக்கும் கூட்டணி கட்சியான தமாகா தலைவர்  ஜி.கே.வாசனுக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்.பி சீட் கேட்டு நீண்ட நாளாக தேமுதிக வந்த நிலையில் அவர்களுக்கு  சீட் கொடுக்காதது அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தேமுதிக , அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , தமாகாவிற்கு மாநிலங்களவை ஒதுக்கியது ,ஆட்சி மன்ற குழு எடுத்த முடிவு. அதிமுக ஒரு ஆலமரம். அது அனைவருக்கும் நிழல் தரும். எல்லாருக்குமே வாய்ப்புகள் கிடைக்கும். அதிமுக ,தேமுதிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என கூறினார்.

author avatar
murugan