144 தடை மீறும் வாகனஒட்டிகளின் வாகனங்கள் பறிக்கப்படும்!ஏ.கே விஸ்வநாதன் எச்சரிக்கை

உலகளவில் அதிவிரைவாக பரவி வரும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் இந்த  வைரஸால் 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் நேற்று ஓரே நாளில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இவ்வாறு விரைவாக பரவி வரும் கொரோனாவிடம் இருந்து மக்களை பாதுகாக்கவும் ,பரவலை தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை கடுமையாக எடுத்தும் அதனை செயல்படுத்தியும் வருகிறது.இந்தியா முழுவதும் ஊரடங்கு என்று அவரசக்காலத்தினைப் போல செயல்பட்டு வருகிறது.சாலைகள் பொதுமக்கள் நடமாடக்கூடாது என்று கூறப்பட்ட நிலையில் அதனை பெரிதுபடுத்தாமல் இருசக்கர வாகனங்களில் பலர் செல்வது கவலையளிக்கிறது.இது குறித்து தமிழக காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறுகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் ஒழுக்கத்தோடு இருக்கிறார்கள். அரசு உத்தரவை பெரும்பாலானோர் மதித்து நடக்கிறார்கள். அதனால் பிற மாநில போலீஸார் போல சாலையில் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை நமக்குத் தேவையில்லை என நினைக்கிறேன். சட்டத்திற்குப் புறம்பாக செய்ய வேண்டியதில்லை. மக்களுக்கு புரியும் வகையில் அறிவுறுத்தி அவர்களை விதிமுறைகளைப் பின்பற்ற வைக்க வேண்டும்.ஆனால் 144 தடையை மீறுபவர்கள் மீதும்  வழக்குப் பதிவு செய்து உள்ளோம். இது குறித்து பிறகு தெரிவிக்கிறோம். வெளி நாடுகளிலிருந்து வந்து வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வந்தவர்கள் 4 பேர் வெளியே சென்ற விவகாரத்தில் அந்த 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்.

சென்னை பெருநகர காவல் எல்லைகளில் 10 சோதனைச் சாவடிகளை அமைத்து உள்ளோம். அதனால் வெளியே இருந்து யாரும் உள்ளே வர முடியாது. உள்ளே இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது. அதற்குத் தடை விதித்துள்ளோம். மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.மேலும்  30 பறக்கும் படை குழுக்களை அமைத்து உள்ளோம். இதில் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை, சுகாதாரத்துறையினர் இருப்பார்கள்.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு இருந்தபோதும் நிறைய பேர் இன்று பைக்கில் சாலைகளில் செல்வதைப் பார்க்க முடிகிறது. அவர்களை காவல்துறையினர்  மடக்கிக் கேட்டால் பொருட்கள் வாங்கப்போகிறோம், மருந்து வாங்கப்போகிறோம் என காரணம் கூறுகின்றனர்.இது விடுமுறை காலமல்ல. தற்போதுள்ள நிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் வழக்குப்பதிவு செய்து பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

144 தடை உத்தரவை ஒரு சிலர் மீறுவதால் அது அனைவருக்கும் பிரச்சினையாக இருக்கிறது. பொதுமக்கள் தேவையில்லாமல் பைக்கில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.சாலைகளில் அத்துமீறி பைக்கில் செல்லும் இளைஞர்களே! இது விடுமுறைக் காலம் அல்ல. எல்லோரும் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துமீறி வாகனங்களில் சென்றால் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்யும். தற்போது முதலில் எச்சரிக்கை விடுத்துள்ளோம். எச்சரிக்கையை மதிக்காமல் நடந்தால் கட்டாயமாக வாகனங்களைப் பறிமுதல் செய்வோம் என்று ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கையை ஒன்றையும் விடுத்துள்ளார்.

author avatar
kavitha