85% மருத்துவ இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து உயர் நிதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு …

சென்னை: மருத்துவ படிப்பில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீத ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.தமிழகத்தில், மருத்துவ படிப்பில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீதம்; மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,ல் படித்தவர்களுக்கு, 15 சதவீதம் என, தமிழக அரசு ஒதுக்கீடு செய்து, 2017, ஜூனில், இதற்கான அரசாணை பிறப்பித்தது.இதை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, “இந்த அரசாணை, மாணவர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக உள்ளதால், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; எனவே, அரசாணை ரத்து செய்யப்படுகிறது,” என, உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவில் கூறியிருப்பதாவது:மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை, மாநில அரசுக்கு உள்ளது. 95 சதவீத மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கின்றனர். சமதளத்தை ஏற்படுத்த, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், இதர பாடத்திட்ட மாணவர்களுக்கும் என, இரண்டு வழிகளை ஏற்படுத்துவதை தவிர, வேறு வழியில்லை. தேசிய தகுதி நுழைவு தேர்வான, ‘நீட்’ தேர்வுக்கு, சி.பி.எஸ்.இ., தான் பாடத்திட்டத்தை நிர்ணயித்துள்ளது.

இதனால், சி.பி.எஸ்.இ.,ல், படித்தவர்களுக்கு சாதகமான நிலை உள்ளது. இது, சமநிலைக்கு எதிரானது. எல்லோருக்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இடம் கிடைப்பதில்லை. மாநில பாடத்திட்ட மாணவர்களை விட, இவர்களின் எண்ணிக்கை மிக குறைவு.

நீட் தேர்வு அனைவருக்கும் பொதுவானது என்றாலும், கேள்வித்தாளை, சி.பி.எஸ்.இ.,யே தயாரிக்கிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்து தான், கேள்விகள் எடுக்கப்பட்டுள்ளன.அதனால், அவர்களுக்கு தான் சாதகமாக உள்ளது. எனவே, மாணவர்கள் மத்தியிலான வேறுபாட்டை நீக்கி, ஒரே நிலையை கொண்டு வர, அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டியதை தவிர, வேறு வழியில்லை. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களும், சி.பி.எஸ்.இ.,ல் படித்தவர்களும், சமமானவர்கள் அல்ல.

வெவ்வேறு பாடத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு, சம வாய்ப்பை வழங்குவதை உறுதி செய்ய, சமன்படுத்தும் நிலை பின்பற்றப்படுகிறது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.

author avatar
Castro Murugan

Leave a Comment