7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது -அமைச்சர் சண்முகம்

அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்க உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார். 
 ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில்   7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணையில் மத்திய அரசு வழக்கறிஞர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அப்பொழுது ,ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் பூஜ்யத்திற்க்கு சமமானது என்று தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறுகையில், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்க உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது.ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக தனது வரம்பை மீறி மத்திய அரசு வழக்கறிஞர் பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.