60 நாள் மீன்பிடித் தடைக்காலம் தமிழகத்தில் முடிவடைந்தது!

இன்று அதிகாலை முதல்  தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததை ஒட்டி விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கம் பெரும்பாலும் கோடைக் காலங்களில்தான் நடைபெறுகின்றன. இதனை முன்னிட்டு 1983ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், தமிழக கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிவரை கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்த 60 நாட்களில் மீனவர்கள் தங்கள் படகு மற்றும் வலைகளை மராமத்து செய்து கொள்வது வழக்கம். இந்த நிலையில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த படகுகளுக்கு மீனவர்கள் பூஜை செய்தனர். தொடர்ந்து கடல் அன்னையை வணங்கிய அவர்கள் இன்று அதிகாலை முதல் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

வெகு நாட்களுக்கு பின்னர் கடலுக்குச் செல்லும் தங்களுக்கு அதிக மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். தொடர்ந்து நாளுக்கு நாள் டீசலின் விலை அதிகரித்து வரும் நிலையில் தங்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தை உயர்த்தித் தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment