குறையுமா வெங்காய விலை? ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்!

இந்தியாவில் வெங்காய விலை உச்சியை தொடும் நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காய இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் பல மாநிலங்களில் பலத்த மலை பெய்து வருவதால், வெங்காய பயிர்கள் அழுகி வருகிறது. இதன்காரணமாக கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, தற்பொழுது கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமளவில் பாதிக்கப்பட்ட நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதனால் பல நாடுகளில் இருந்து வெங்காயங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு லட்சம் டன் வெங்காயங்களை இறக்குமதி செய்யவுள்ளதாகவும், அதில் முதல் கட்டமாக அப்கானிஸ்தானில் இருந்து மத்திய அரசின் நிறுவனமான எம்.எம்.டி.சி. (MMDC) நிறுவனம் மூலம் 4 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யவுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தொடர்ந்து, வெங்காய விலை குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் இந்திய சந்தைகளில் வெங்காய வரத்து அதிகரித்து, விலை-யும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.