100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் ஸ்கிம்மர் கருவி மூலம் பலரது வங்கி கணக்கு விவரங்களை திருடி கொள்ளை!

100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் ஸ்கிம்மர் கருவி மூலம் பலரது வங்கி கணக்கு விவரங்களை திருடி கொள்ளை!

மும்பையில் வைத்து ஸ்கிம்மர் கருவி மூலம் பலரது வங்கி கணக்கு விவரங்களை திருடி, 100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட நபரை  சிபிசிஐடி போலீசார் பிடித்துள்ளனர். இந்த நூதன மோசடியில் வெளிவந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கேரளாவில் கடந்த மார்ச் மாதம் அடிதடி சம்பவத்தில் கைதான புதுச்சேரியை சேர்ந்த நபரிடம் 15க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் இருந்தன. இதனால், சந்தேகமடைந்த கேரள காவல்துறையினர் விவரங்களை புதுச்சேரி போலீசாருக்கு அனுப்பினர். இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பல கோடி ரூபாய் பணம் திருடப்பட்டதை கண்டறிந்தனர்.

கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்கள், அரசு ஒப்பந்த மருத்துவர் என அடுத்தடுத்து 11 பேர் பிடிபட்டனர். ஏடிஎம் கார்டுகள், கேமராக்கள், பிஓஎஸ் மிஷன், ஸ்கிம்மர் கருவிகளும் சிக்கின. இந்த நூதன மோசடியில் மூளையாக செயல்பட்ட சந்துரு ஜி என்பவர், 2 மாதகால  தேடுதல் வேட்டைக்கு பின் மும்பையில் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தில், கார்டை நுழைக்கும் பகுதியில் ஸ்கிம்மர் கருவியை பொறுத்தியும், ரகசிய கேமராக்களை வைத்தும் பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை இவர்கள் திரட்டுகின்றனர். அத்துடன் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஏஜெண்டுகள் மூலம் வெளிநாட்டினரின் வங்கி கணக்கு தகவல்களையும் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தகவல்கள் மூலம் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து, பிஓஎஸ் இயந்திரத்தை பயன்படுத்தி கடைகளில் பொருட்கள் வாங்குவது போல் பணத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்கிம்மர் கருவி பொறுத்த ஒரு குழு, அதை எடுப்பது மற்றொரு கும்பல், போலி ஏடிஎம் கார்டுகள் தயாரிக்க வேறு ஆட்கள், பணப்பரி மாற்றத்திற்கு உதவ சில்லறை வர்த்தக கடை உரிமையாளர்கள் என தனித்தனியாக செயல்பட்டுள்ளனர். சுற்றுலாத் தலங்களில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை குறிவைத்து திட்டம் தீட்டியதால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பதும் தெரியவந்தது.

பலரது வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணத்தை எங்கே பதுக்கி வைத்துள்ளனர், சொத்துக்களாக மாற்றியுள்ளனரா, பணப் பரிவர்த்தனையில் மேலும் யார் யார் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள், சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்பிருக்கிறதா, என பல தகவல்கள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *