விபத்தில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நஷ்டஈடு – கோர்ட்டு அதிரடி உத்தரவு..!

சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் ஆர்.நாராயணன். இவரது மகன் மணிகண்டன் (20). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ‘சூப்பர்வைசர்’ ஆக பணிபுரிந்தார். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார்.

இந்த நிலையில் பூந்தமல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் டேங்கர் லாரியில் அமர்ந்து பயணம் செய்தார். அவருடன் 2 ஊழியர்களும் இருந்தனர். அப்போது நடந்த விபத்தில் லாரி கவிழ்ந்து மரணம் அடைந்தார்.

இச்சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

இதற்கிடையே விபத்தில் இறந்த மணிகண்டனின் தந்தை நாராயணன் சென்னையில் உள்ள மோட்டார் விபத்துகள் இழப்பீடு நடுவர்மன்ற கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

எனது மகன் மணிகண்டன் வருமானத்தில்தான் குடும்பம் இயங்கி வந்தது. தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். டிரைவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை ஓட்டியதால் விபத்த ஏற்பட்டுள்ளது. எனவே லாரி நிறுவனமும், தனியார் இன்சூரன்சு நிறுவனமும், ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் விசாரணையின் போது லாரி நிறுவனம் ஆஜராகவில்லை. தனியார் இன்சூரன்சு கம்பெனியும் குற்றச்சாட்டுகளை மறுத்தது.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ரமேஷ் விபத்தில் மரணம் அடைந்த மணிகண்டன் குடும்பத்துக்கு தனியார் இன்சூரன்சு நிறுவனம் ரூ.16 லட்சத்து 42 ஆயிரம் நஷ்டஈடு தொகையை 2015-ம் ஆண்டு முதல் 7.5 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார். டிரைவர் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment