ராகிங் 3 மணிநேரம் முதலாமாண்டு மாணவனை அடித்த கொடுமை..!

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் ஒருவரை ராகிங் செய்த 2ஆம் ஆண்டு  மாணவர்கள் அவரை 3 மணி நேரம் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள DC மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் அதுல் மோகன். இவரை 2ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர்.

மாணவர் அதுல் மோகனின் ஒரு கையில் இரும்பு கம்பி ஒன்றையும், செல்போனையும் ஒரு சேர பிடித்துக்கொள்ளுமாறி கூறிவிட்டு அவர்கள் குச்சியால் அடிக்கும் போது எந்தப் பொருளும் கீழே விழுந்துவிடக்கூடாது என்றும் அப்படி விழுந்தால் அடிக்கத்தொடங்குவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் மாணவர் அதுல் மோகனை அடித்த போது அவர் கையில் இருந்த செல்போன் கீழே விழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து அந்த சீனியர் மாணவர்கள் அவரை சரமாரியாக தாக்கத்தொடங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த மாணவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க எண்ணிய அதுல் மோகன், தனக்கு வலிப்பு ஏற்படுவதாக அவர்களிடம் பொய்யாக கூறியுள்ளார். மாணவர் அதுல் கூறுவது பொய் எனத் தெரிந்ததும் அந்த மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கத்தொடங்கியுள்ளனர்.

பின்னர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் அதுல் மோகன், சீனியர் மாணவர்களால் தான் 3 மணிநேரங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அவரின் கை, கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மாணவர் மோகன் கடந்த ஜூன் 22 அன்று தான் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அந்தக் கல்லூரியிலும், மாணவர் விடுதியிலும் சீனியர்களால் பகடிவதை எனும் ராகிங் கொடுமையை ஜூனியர் மாணவர்கள் அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அக்கல்லூரியின் முதல்வரிடம் பேசும் போது சம்பவத்தில் ஈடுபட்ட 3 மாணவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அதே போல மாணவர் அதுல் மோகன் சார்பில் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் திரும்பப்பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இருப்பினும் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் திரும்பப்பெறப்படவில்லை என்று மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment