மாணவர்கள் தமிழக பள்ளிக்கல்வி துறையின் புதிய கேள்வி தாள் முறைக்கு வரவேற்பு!

மாணவர்கள் வரவேற்பு , பாடங்களை புரிந்து படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தற்போது நடக்கின்ற பொதுத் தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு சவால் விடும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

நீட் தேர்வை எதிர் கொள்வதில் அச்சம்..! போட்டி தேர்வுகளில் வெற்றிகளை பறிகொடுக்கும் பரிதாபம்..! என நீடித்து வந்த தமிழக மாணவர்களின் சோகத்தை போக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிரடி முயற்சிகளை கையாண்டு வருகின்றது..!

அதன்படி தற்போது நடந்துவரும் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் புதியமுறையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களில் இருந்தும் பாடத்தின் பின்பகுதியில் இருந்தும் அதிக கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அப்படி கேட்கப்படமாட்டாது என்று, இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தபடி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கேட்கப்படுவதுபோல, பாடத்தின் உள்பகுதியில் இருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட கேள்விகளை மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் முழுமதிப்பெண் எடுப்பது இனி நடக்காது..! பாடத்தை முழுமையாகவும், புரிந்தும் படித்துள்ள மாணவர்கள் எளிதில் விடை அளிக்கின்றனர். அவர்களுக்கு இது புதிய அனுபவமாக இருப்பதாகவும், இதே முறையை அவர்கள் வரவேற்றும் உள்ளனர்.

அதே நேரத்தில் முழுமதிப்பெண் அதிக மாணவர்களுக்கு கிடைக்குமா? என்ற கேள்வியை எழுப்புகின்றனர் ஆசிரியர்கள்

நீட் போன்ற தேசிய அளவில் நடக்கக் கூடிய தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக மாணவர்களுக்கு, இது போன்ற நுண்ணறிவுள்ள வினாத்தாள் முறை அவசியமானது. இனிவரும் அனைத்து தேர்வுகளுக்கும் மாணவர்கள் மனப்பாட முறையை மறந்து, புரிந்து படிக்கும் நிலைக்குமாற வேண்டும் என்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

மாணவர்கள் பாடப் புத்தகத்தை முழுமையாக புரிந்து படித்தால், எந்த தேர்வாக இருந்தாலும் எளிதாக எதிர்கொள்ளலாம் என்பதே கல்வியாளர்களின் அறிவுரையாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment