மருத்துவம், தெருவிளக்கு வசதியை கொடுங்கள் : கிராம மக்கள்..!

மும்பை-ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே 500 கி.மீ. தூரத்திற்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிவேக புல்லட் ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு மராட்டியத்தில் கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய அதிவேக ரெயில்வே துறை சார்பில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இருப்பினும் கிராமங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு விவசாய விளை நிலங்கள், சப்போட்டா, மாம்பழம் விளையவைக்கும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மத்திய அரசு திட்டமிட்டது போன்று டிசம்பர் மாதத்திற்கு நிலத்தை கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது பிரதமர் அலுவலகம் இப்பணியை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
மராட்டிய மாநிலம் புல்கார் மாவட்டம் வழியாக புல்லட் ரெயில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. புல்கார் மாவட்ட கிராம மக்கள் பேசுகையில், புல்லட் ரெயில் திட்டத்திற்கு அனுமதியளிப்பதற்கு முன்னதாக எங்களுக்கு குளங்கள், ஆம்புலன்ஸ்கள், சோலார் தெருவிளக்குகள், மருத்துவர்களை முதலில் கொடுங்கள் என கேட்டுள்ளார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
23 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துவதில் தேசிய அதிவேக ரெயில்வே துறை கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. இக்கிராமங்களில் மக்களை சரிசெய்யும் விதமாக அதிகாரிகள் நேரடியாக களமிறங்கி தனித்தனியாக நிலங்களின் உரிமையாளர்களிடம் பேசியுள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கை என்னவென்று கேட்கிறார்கள். தேசிய அதிவேக ரெயில்வே துறை செய்தித் தொடர்பாளர் தனெஞ்சய் குமார் பேசுகையில், “நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளோம். முன்னதாக திட்டம் குறித்தான நலன்களை எடுத்துரைக்க கிராம மக்களை ஒன்றாக திரட்டினோம். அது பயனளிக்கவில்லை. இப்போது நாங்கள் நில உரிமையாளர்களை தனியாக சந்திக்க முடிவு எடுத்து உள்ளோம். நிலம் வழங்குபவர்களுக்கு நிவாரணமாக என்ன வேண்டும் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதிவாங்க முன்வந்துள்ளோம்,” என கூறியுள்ளார்.
508 கிலோ மீட்டர் புல்லட் ரெயில் திட்டத்தில் 110 கிலோ மீட்டர் புல்கார் மாவட்டம் வழியாக செல்கிறது. இம்மாவட்டத்தில் மட்டும் 73 கிராமங்களில் 300 ஹெக்டேர்ஸ் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது, இதனால் 3,000 மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்களிடம் உங்களுக்கு தேவையென்ன? என்ற அதிகாரிகளின் முயற்சிக்கு குளத்தை சரிசெய்து கொடுங்கள், அடிப்படை வசதியை கொடுங்கள் என கிராம மக்கள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. குராத், விக்ராம்கார் கிராமங்களை சேர்ந்த மக்கள் எங்களுக்கு மருத்துவர்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். இதேபோன்று எங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி வேண்டும், சோலார் தெரு விளக்குகள் வேண்டும் என பல்வேறு அடிப்படை தேவைகளை பட்டியலிட்டுள்ளார்கள். கெல்வா கிராமத்தை சேர்ந்தவர்கள் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று கூறிஉள்ளார். பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் நில உரிமையாளர்களிடம் இருந்து கடிதங்கள் பெறப்படுகிறது.
 தேசிய அதிவேக ரெயில்வே துறை செய்தித் தொடர்பாளர் தனெஞ்சய் குமார் மேலும் கூறுகையில், “எழுத்துப்பூர்வமாக இருந்தால் நாங்கள் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும். புல்லட் ரெயில் திட்டமானது இப்பிராந்தியத்திற்கு வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் கொடுக்கும், இதனால் அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்,” என கூறியுள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment