‘மணிக்கய மலரய பூவே’ மத நம்பிக்கையை இழிவுபடுத்துகிறதா..? நடிகை பிரியா வாரியர் மீதான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை!

‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் தொடர்பாக நடிகை பிரியா வாரியர் மீது வழக்குப் பதியவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தில் வரும் ‘மணிக்கய மலரய பூவே’ என்ற பாடல் அண்மையில் இணையதளத்தில் வெளியாகி பெரும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற, நடிகை பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்று மிகவும் பிரபலம் ஆனது. இக்காட்சியை இணையதளத்தில் சுமார் 3 கோடியே 50 லட்சம் பேர் வரை பார்த்து ரசித்துள்ளனர். ‘ஒரு அடார் லவ்’ படம் வரும் மார்ச் மாதம்தான் வெளியாகிறது என்றாலும், அதற்கு முன்பே, கண் அசைவுக்காக நடிகை பிரியா வாரியர் மிகவும் பிரபலமாகி விட்டார்.இந்நிலையில், ‘மணிக்கய மலரய பூவே’ பாடல் முஸ்லிம் சமூகத்தின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தையும், அவரின் மனைவி கதீஜா ஆகியோரையும் அவதூறு செய்யும் வகையில் இருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்பாக, ஹைதராபாத்தில் உள்ள பளுக்னமா காவல் நிலையம், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத், மும்பை காவல் நிலையம் ஆகியவற்றில் முஸ்லிம் அமைப்புகள் புகாரும் செய்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல், 40 ஆண்டுகளாக வடகேரளத்தில் விசேஷங்களின்போது பாடப்பட்டு வரும் ஒன்றுதான் எனும்போது, தற்போது திடீரென சர்ச்சை எப்படி வந்தது? என்று படத்தின் இயக்குநர் உமர் அப்துல் வகாப் கேள்வி எழுப்பினார்.எனினும், பிரியா வாரியர் மற்றும் இயக்குநர் உமர் அப்துல் வகாப், தயாரிப்பாளர் ஜோசப் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின.இதையடுத்து, நடிகை பிரியா வாரியரும், இயக்குநர் உமரும், போலீசார் தங்கள் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்துசெய்ய கோரியும் போலீசாருக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில்,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, டி.ஒய். சந்திர சூட், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, புதன்கிழமையன்று இம்மனுவை விசாரித்தது. அப்போது, பிரியா வாரியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஸ் பீரன், “மணிக்கய மலரய பூவே.. பாடல் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டதல்ல; பிரியா வாரியரின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காக வேண்டுமென்றே புகார் அளிக்கப்பட்டுள்ளது; எனவே, அதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். உச்ச நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “மணிக்கய மலரய பூவே.. பாடலுக்காக, நடிகை பிரியா வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது; மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி புதிதாகவும் அவர்கள் மீது எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யக்கூடாது” என ஆணையிட்டனர்.அத்துடன் பிரியா வாரியர் மீதான வழக்கு தொடர்பாக, பதிலளிக்குமாறு மகாராஷ்ட்டிரா, தெலுங்கானா அரசுகளுக்கும் உத்தரவிட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment