மணப்பெண் வீட்டுக்கு குதிரையில் செல்ல தலித் மாப்பிள்ளைக்கு தடை..!

வடமாநிலங்களில் திருமணத்தின் போது, மாப்பிள்ளை குதிரையில் மணப்பெண் வீட்டுக்கு ஊர்வலமாக செல்வது வழக்கமாக உள்ளது.

இதேபோல் மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம் பதமால்கர் கிராமத்தில் அசோக் அகிர்வார் என்பவருடைய திருமணம் நடைபெற்றது. இவர், தலித் சமூகத்தை சேர்ந்தவர்.

மணப்பெண் வீட்டுக்கு அவர் குதிரையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது அங்குள்ள உயர் ஜாதியான தாகூர் இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தலித் சமூகத்தை சேர்ந்தவர் குதிரையில் ஊர்வலம் செல்லக்கூடாது என்று கூறி அவரை குதிரையில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி மணப்பெண் வீட்டுக்கு நடந்து செல்ல வைத்தனர். மேலும் உயர் ஜாதியின பெண்கள் மணமகன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

இது, தலித் சமூக மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்களும், உயர் ஜாதியினரும் மோதிக் கொண்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment