பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்:தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணை!அமைச்சர் அன்பழகன்

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்  போலீசார் , கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக சர்ச்சையில் சிக்கிய, பேராசிரியை நிர்மலா தேவியை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு திசை திருப்ப முயற்சித்து அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் நிர்மலா தேவி மீது மாணவிகள் புகார் அளித்தனர்.

இதனால், கல்லூரியில் இருந்து நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், கல்லூரி நிர்வாகமும், மாதர் அமைப்பும் அவர் மீது, தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார்கள் அளித்தன. இதனை தொடர்ந்து, நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்துவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால், அவர் வீட்டுக்குள் இருந்துகொண்டு, கதவை திறக்க மறுத்தார்.

இதனால், சுமார் 6 மணி நேரமாக வீட்டின் வெளியே போலீசார் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுவிடலாமா என்றும் போலீசார் ஆலோசித்தனர். எனினும் உறவினர்கள் அளித்த ஒரு செல்போன் எண் மூலம் நிர்மலா தேவியை தொடர்பு கொண்ட போலீசார் அவர் வெளியேவர பேச்சுவார்த்தை நடத்தினர்.

வீட்டைச் சூழ்ந்து நிற்கும் ஊடகத்துறையினரை வெளியேற்றினால் தான் வீட்டைவிட்டு வெளியே வருவேன் என நிர்மலா தேவி கூற அவ்வாறு ஊடகத்துறையினர் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நிர்மலா தேவி வீட்டிலிருந்து வந்தார். அப்போது அவரை உடனடியாக கைது செய்து வேனில் ஏற்றி போலீசார் அழைத்துச் சென்றனர்.

அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிர்மலாதேவியிடம், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன், ஏடிஎஸ்பி மதி, டிஎஸ்பி தனபால் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துவர பேராசிரியை நிர்மலாதேவியை தூண்டிய உயர் அதிகாரிகள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, இந்த விவகாரத்தில் மதுரை பல்கலைக் கழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என அதன் துணைவேந்தர் செல்லத்துரை விளக்கம் அளித்துள்ளார். பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் குறித்து விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செல்லத்துரை 15 நாளில் உண்மையை வெளிக்கொண்டுவருவோம் என்றார்.

இந்நிலையில்  உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment