பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் காதலன் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு உதவியதாக மற்றொரு இளைஞரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 28ஆம் தேதி செங்கல்பட்டு அருகே உள்ள பழவேலி என்ற இடத்தில் நெடுஞ்சாலை ஓரம், எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்தப் பெண் சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பொக்கிஷமேரி என்பதும், கொலை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.

 

கொலை குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், பொக்கிஷமேரியைக் கொலை செய்ததாக அப்பெண்ணின் காதலரான பாலா என்பவரை கைது செய்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், பொக்கிஷமேரி திடீரென பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் பொக்கிஷமேரியை பாலா கொலை செய்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த பாலாவின் நண்பர் சுகுமாறன் என்பவனையும் போலீசார் கைது செய்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment