பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு நடந்த முறைகேடு ஆய்வு குறித்த அறிக்கையை அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. வைர வியாபாரிகள் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி உள்ளிட்டோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர். இதனை குறித்து சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை விசாரித்து வருகிறது. மேலும் ரிசர்வ் வங்கி தனிப்பட்ட முறையில் விசாரித்தது. இந்நிலையில் வங்கி மோசடி தொடர்பான தகவல்களை தெரிவிக்க வலியுறுத்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆர்டிஐ விண்ணப்பித்தது.
இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி வங்கிகளின் கணக்குகளை தணிக்கை செய்வது கிடையாது. இருப்பினும் வங்கிகளின் கணக்குகளை ஆய்வு செய்கிறோம், ஆபத்து அடிப்படையில் மேற்பார்வையும் செய்கிறோம் என தெரிவித்து உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2007 மற்றும் 2017-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தேதியை குறிப்பிட்டு உள்ளது 2011-ம் ஆண்டை தவிர்த்து. அந்த ஆண்டுக்கான தேதிகள் இல்லை எனவும் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் ஆய்வறிக்கையின் தகவல்களின் நகல்களை தர வங்கி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணை நடைமுறையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதற்கான பிரிவுகளை சுட்டிக்காட்டி தகவல்களை தெரிவிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியிடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளது.