தேர்வுக்காக விமானங்கள் நிறுத்தம்…கல்விக்காக அரசு அதிரடி…!!

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
தென்கொரியாவில் தேசிய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் தேசிய பல்கலைக்கழக தேர்வானது, மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சமூக அந்தஸ்து, நல்ல பணி மட்டும் அல்லாது திருமணத்திற்கு நல்ல வரன்கள் கிடைப்பதற்கும் இந்த தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்வு, தென்கொரியாவில் உள்ளூர் நேரப்படி காலை 8.40 மணிக்கு துவங்கியது. மொத்தம் 9 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வுக்காக, அனைவரும் வியக்கும் படியான பல நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு ஏற்படுத்தியுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, அனைத்து அலுவலங்களின் துவங்கும் நேரம் ஒரு மணி நேரம் தேர்வு நாளான இன்று மட்டும்  தள்ளிவைக்கப்பட்டது. அதையும் மீறி போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மாணவ மாணவிகளை போலீசார் தங்கள் வாகனங்களில் அழைத்துக்கொண்டு தேர்வு மையத்தில் விட்டனர்.
தேர்வில் முதல் அரை மணி நேரம் ஆங்கிலம் கேள்வி நேரம் (English listening test) நடைபெற்றது. இதற்காக ஒலி மாசுவை குறைக்கும் ஒரு முயற்சியாக தென்கொரிய விமான நிலையங்களில் 25 நிமிடங்கள் விமான புறப்பாடு மற்றும் வருகை நிறுத்தப்பட்டது. தென்கொரிய வான் பரப்பை கடந்து செல்லும் விமானங்கள் தாழ்வாக பறக்க தடை விதிக்கப்பட்டது. 10 ஆயிரம் அடிக்கு மேல் மட்டுமே செல்ல விமானங்களுக்கு அனுமதிக்கப்பட்டது.  தேர்வுக்காக 134 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டதாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், முறைகேடுகளை தவிர்ப்பதற்காக தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தேர்வு முடியும் வரை பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற மாணவ மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், காற்றில் புழுதி மாசு அதிகமாக தென்கொரியாவில் இருப்பதால், மாஸ்க் அணிந்து தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 5 லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், பிராந்திய உச்சி மாநாட்டுக்காக சிங்கப்பூர் சென்றுள்ள போதிலும், அங்கிருந்த படி, தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துச்செய்தியை அனுப்பியுள்ளார்.
dinasuvadu.com 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment