டெல்லி ஆர்ச் பிஷப்பின் சர்ச்சைக்கு உள்ளான கடிதம்! பாஜக தேர்தலில் தோல்வியைத் தழுவ பிரதிக்க வேண்டும்!

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்,பாஜக அரசுக்கு எதிரான டெல்லி ஆர்ச் பிஷப்பின் கடிதம் உள்நாட்டு போருக்கு வழிவகுக்கக் கூடியது என எச்சரித்துள்ளார்.

மத்தியில் உள்ள பாஜக அரசு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவ வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவர்கள், பிரச்சாரமும், பிரார்த்தனையும் மேற்கொள்ள வேண்டும் என டெல்லி ஆர்ச் பிஷப் அனில் கோட்டோ, தேவாலய நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தேசத்தை வலுவிழக்கச் செய்யும் என்றும், உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் எச்சரித்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அவர்களை அரசு பாகுபடுத்திப் பார்ப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

ஆர்ச் பிஷப்பின் கடிதத்திற்கு மத்திய அமைச்சர் கே.ஜெ. அல்போன்சும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு தவறான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர், மதத் தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள ஆர்ச் பிஷப் அனில் கோட்டோ, நரேந்திர மோடி அரசைக் குறிப்பிட்டு தான் அவ்வாறு கடிதம் எழதவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment