ஜப்பானில் பசியால் குழந்தை பலி ! பட்டினி போட்டு கொன்ற தாய் தந்தை கைது..!

ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் யூரி (வயது 25). இவர், வாலிபர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார்.

அவர்களுக்கு யுவா என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் யூரி அந்த வாலிபரை பிரிந்து புனாட்டோ (33) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

முதல் கணவருக்கு பிறந்த யுவாவையும் தன்னுடன் வைத்து வளர்த்து வந்தார். நாளடைவில் அந்த குழந்தை மீது யூரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. 2-வது கணவர் புனாட்டோவும் வெறுப்பை காட்டினார்.

அவர்கள் இருவரும் குழந்தை யுவாவை கொடுமைப்படுத்தினார்கள். தற்போது அவளுக்கு 5 வயது ஆகி இருந்தது. தொடர்ந்து கொடுமைப்படுத்தியதுடன் உணவும் கொடுக்காமல் பட்டினி போட்டனர். இதில், அந்த குழந்தை இறந்து விட்டது.

இதன் பிறகு போலீசுக்கு புனாட்டோ போன் செய்து தனது குழந்தை திடீரென மயங்கி விழுந்து விட்டதாகவும், இதய துடிப்பு இல்லை என்றும் கூறினார்.

போலீசார் அங்கு வந்து பார்த்தனர். அந்த குழந்தை இறந்து கிடந்தது. 5 வயதில் குழந்தைகள் 20 கிலோ வரை எடை இருக்கும். ஆனால், இந்த குழந்தை 12 கிலோதான் எடை இருந்தது. மிகவும் ஒல்லியாக இருந்தது. எனவே, சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

யுவாவின் நோட்டு புத்தகத்தை பார்வையிட்டனர்.

அப்போது ஒரு இடத்தில் தனது தாயும், வளர்ப்பு தந்தையும் தன்னை தினமும் கொடுமைப்படுத்துகிறார்கள். இதை யாராவது தடுத்து நிறுத்துங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, கணவன் – மனைவி இருவருமே அந்த குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொன்றதாக கூறினார்கள். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment