சென்னையில் வீட்டின் சுவரில் ஏறி குதித்ததில் கம்பி குத்தி ஒருவர் படுகாயம்!

சென்னையில் உள்ள  நுங்கம்பாக் கத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் இவர் கார் டிரைவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் சுவரில் ஏறி குதித்த போது கால் தடுமாறி அருகில் இருந்த இரும்பு கதவின் மேல் விழுந்தார்.

அப்போது கதவில் இருந்த வேல் போன்ற கூர்மையான கம்பி அவர் முதுகு பகுதியில் குத்தியது.இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், காயத்தின் தன்மையை உணர்ந்து தீயணைப்பு படையினரை அழைத்தனர்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், இரும்பு கதவின் ஒரு பகுதியை ‘ஹைடிராலிக் கட்டர்’ கருவி உதவியுடன் அறுத்தனர். வெற்றிவேல் உடலில் 2 அடி கம்பி குத்தி இருந்த நிலையில் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது கூர்மையான கம்பி வெற்றிவேலின் நுரையீரலை குத்தியிருப்பது தெரியவந்தது. உடனே கம்பியை அறுவை சிகிச்சை மூலம் எடுக்க முடிவு செய்தனர். மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி உத்தரவின் பேரில், இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை துறை தலைவர் சிவராம் தலைமையில், மயக்கவியல் நிபுணர் டாக்டர் கேத்தரின் கபூர் மேற்பார்வையில் வெற்றிவேலுக்கு டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். .

இந்த அறுவை சிகிச்சை குறித்து ‘டீன்’ ஜெயந்தி கூறுகையில், வெற்றிவேல் உடலில் குத்திய கம்பியை உடனே வெளியே எடுத்திருந்தால் ரத்தம் வீணாகி உயிர் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கும். தீயணைப்பு படையினர் சாதுர்யமாக செயல்பட்டு கதவின் ஒரு பகுதியை அறுத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இதனால் தான் அறுவை சிகிச்சை மூலம் அவரை காப்பாற்ற முடிந்தது. கூர்மையான ஆயுதம் உடலில் குத்தினால் அதை வெளியே எடுக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் காப்பாற்றுவது சுலபம். இதற்காக தீயணைப்பு படையினரை பாராட்டுகிறேன் என்றார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment